செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

நினைவுகள் பாகம் 1

வறுமை

சிலரை சிந்திக்க வைத்து
சீர்படுத்துகிறது..
சிலரை சீரழித்து அவர்களை
சிறையிலடைக்கிறது..

நினைவு பாகம் - 1

நீஈஈஈஈண்ட.. இடைவெளிக்குப்பிறகு எனது பள்ளி நண்பன் ஒருவனை சந்திக்க நேர்ந்தது.
பார்த்ததும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது அப்படி ஒரு அதிர்ச்சி. ஏனென்றால் அவனை நான் பார்த்தது திருவொற்றியூர் குற்றவியல் நீதிமன்றம் அருகில். கைதியாக கையில் விலங்குடன். காவல் வண்டிக்கு அருகில் ஒரு காவலருடன் நின்றிருந்தான். அந்தக் காவலரும் நமக்குத் தெரிந்தவர்தான். நம் கடை இருக்கும் பகுதி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்து சில மாதங்களுக்கு முன் பக்கத்தில் வேறிடத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்டார்.
அவ்வபோது நம் கடைப்பக்கம் வரும்போது வந்து பார்த்துவிட்டுப் போவார். இனிமையாக பழகக்கூடியவர்.

சரி, நம் நண்பனைப் பார்ப்போம்.
'என்ன மெடிக்கல் இந்தப்பக்கம்'னு காவலர் கேட்டார்..
"அய்யா! இங்க பெரிய மருந்துக்கடையில மருந்து வாங்க வந்தேங்க அய்யா"னு அவரை பார்த்துச் சொல்லாமல் நண்பனையே பார்த்துக்கொண்டு சொன்னேன்..
உடனே அவர் 'இவர உங்களுக்குத் தெரியுமா மெடிக்கல்'னு கேட்டார்.

அவனும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். ஆள் தாடியும் மீசையுமாக.. முகத்தில் உணர்ச்சியே இல்லாத சிரிப்புடன்.
எப்படி மறக்க முடியும் அவனை ஒரு வருடமா இரண்டு வருடமா..
'மெடிக்கல் குமார்' மறுபடியும் அழைத்தார் காவலர். "ஆங்..சொல்லுங்கய்யா"
'இவர உங்களுக்குத் தெரியுமானு கேட்டேன்'
"ஆமாங்க அய்யா.. இவன் என் பள்ளிக்கால நண்பன் அய்யா.. இவனும் நானும் ஒன்னாம் வகுப்பிலிருந்து இல்ல இல்ல அதுக்கு முன்னாடி பால்வாடியிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒன்னா படிச்சோம் அய்யா.. என்னங்கய்யா ஆச்சு?" என்றேன்.
'அய்யோ கொடுமைடா சாமி'னு லேசா நெற்றியின் மேல் தட்டிக்கொண்டு, 'அவரையே கேளுங்க தம்பி' சொல்லிவிட்டு தலையிலிருந்த தொப்பிய கழட்டி வியர்வையை துடைத்துக் கொண்டு பக்கத்திலிருந்த மரத்திண்டில் உட்கார்ந்துக்கொண்டார்.
நான் நேராக அவனைப்பார்த்ததும் நெஞ்சம் கனத்தது, வாய்ப்பேச வார்த்தை வரவில்லை. ஒரு பக்கம் கண்ணீர் ஒரு பக்கம் அழுகை சோகமே என்னை முழுமையாக ஆட்கொண்டுவிட்டது. எப்படியோ அவற்றை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு அவனிடம், "என்னடா ஆச்சு சங்கர்.. ஏன் நீ இப்படி ஆகிட்ட? ஏன் என்னாச்சு.." என்று கேள்வி மேல் கேள்வி.
மறுபடியும் அவன் உணர்ச்சியே இல்லாமல் சிரித்துக்கொண்டு ' நீ நல்லாருக்கியாட விஜி, அப்பா அம்மாலாம் எப்படியிருக்காங்க?
நம்ம தங்கச்சி எப்படி இருக்கு? அதுக்கு கால்யாணம் ஆயிடுச்சா? உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா? பசங்க இருக்கா?
தம்பி நாகராஜ் எப்படி இருக்கான்?' இப்படி பல கேள்விகள். அவன் என்னைப் பார்த்து..

உடனே அந்த காவலர் எழுந்து வந்து அவனையும், என்னையும் மாறி மாறி பார்த்தார். நான்"என்னங்க அய்யா?" என்றேன். அவர் 'தம்பி.. அவர் உங்ககிட்ட நல்லா பேசுறாரே.. ஜெயில்லயும் சரி, வண்டியில வரம்போதும் சரி அவர் யார்கிட்டையும் சரியா பேசமாட்டாரே..' என்றார்.
நான் "அய்யா.. ஒரு வருசமா ரெண்டு வருசமா பதினொரு வருசங்களா நாங்க நெருங்கிய நண்பர்கள் அய்யா.." என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது இன்னொரு காவலர் வந்ததும் இவர் சென்று அவரிடம் ஏதோ பேசிவிட்டு, சங்கரை கைவிலங்கை கழட்டிவிட்டு அவருடன் அனுப்பி வைத்தார்.
என் மனது அடித்துக்கொண்டது அய்யயோ மறுபடியும் அவனைப் பார்க்க முடியுமா என்று. அவன் போகும்போதே இங்கேயே இருஎன்று சைகைக்காட்டிவிட்டுச் சென்றான்.
மறுபடியும் நம் காவலர் என்னிடம் வந்து 'இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவார் தம்பி. ஜட்ஜ்அய்யா முன்னாடி விசாரணை நடக்கும் முடிஞ்சவுடனே வருவார்.. அப்பறம் சொல்லுங்கத் தம்பி சங்கர் எப்படி பழக்கமுன்னு'

என் நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன..
                               (தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக