செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

நினைவுகள் பாகம் 3

நினைவுகள் - பாகம்-3

கொடுமையிலும்
கொடுமை
இளமையில்
வறுமை.!

'உங்கள் பிள்ளைகளை சேர்த்துக்க முடியாதம்மா..காது எட்டவில்லையே' என பள்ளி த.ஆசிரியர் சொன்னதும் ஏமாற்றமாக தான் இருந்திருக்கும் அம்மாவிற்கு.
அம்மா அவரிடம் "அய்யா! சிலேட்டு குச்சியெல்லாம் வச்சிகிட்டு ஏதேதோ கிருக்குறான் அய்யா. வேற ஏதாவது வழியில்லையா? பாத்து சேத்துக்கோங்க அய்யா"னு கேட்க, சங்கரோட அம்மாவும் இதைப் போல கேட்க ஆசிரியரும் சிறிது யோசித்து, சன்னல் வழியாக பள்ளியின் பின்னால் இருந்த ஒரு கட்டிடத்தைக் காட்டி
'வேணும்னா ஒன்னு செய்யலாங்கமா அதோ தெரியுதே பால்வாடி (அங்கன்வாடி அல்லது சத்துணவுக்கூடம்) அங்க ஒரு வருசம் ரெண்டுபேரும் படிக்கட்டும். அப்புறமா இங்க சேத்துக்கலாம்'னு சொல்லி, சங்கர் அம்மாவிடம் 'அங்க ஒரு டீச்சர் இருப்பாங்க அவங்கள நான் கூப்டேனு் கூட்டிட்டு வாங்க'னு அனுப்பினார்.

சிறிது நேரத்தில் ஒரு உயரமான பெண்மணியுடன் சங்கர் அம்மா வந்து நின்றார்கள். த.ஆசிரியர் அவர்களிடம்
'சரிதா டீச்சர் இவங்க ரெண்டு பேரையும் இன்னைக்கே சேத்துக்கங்க மற்ற விவரத்த இவங்க கிட்ட கேட்டுக்கங்க, 
சரிங்கம்மா உங்க பிள்ளைங்க ரெண்டுபேரும் ஒரு வருசம் அங்க படிக்கட்டும் அப்பறமேட்டு இங்க சேத்துக்கலம் சரியா.. போயிட்டி வாங்கனு'
அந்த பால்வாடி ஆசிரியையுடன் அனுப்பிவைத்தார்கள். அம்மாவும், சங்கரோட அம்மாவும் அவருக்கு நன்றியை சொல்லிவிட்டு எங்களையும் அழைத்துக்கொண்டு பால்வாடிக்குச் சென்றார்கள்.
அங்கே ஒரு பத்து பதினைந்து பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுடன் என்னையும் சங்கரையும் அமரசொல்லி விட்டு, சரிதா டீச்சர் எங்கள் பெயர் மற்றும் மற்றத் தகவல்களை கேட்டு ஒரு பெரியநோட்டு புத்தகத்தில் எழுதிக்கொண்டார்கள்.
பின்பு எங்களுடைய அம்மாக்களிடம்
'இதோ பாருங்க அம்மா தினமும் காலைல இந்த ஆயாம்மா வந்து உங்க பிள்ளைங்கள கூப்பிட வருவாங்க அனுப்பிடுங்க, மத்தியான சாப்பாடும் இங்கையே கொடுத்திடுவோம். மதியம் ரெண்டு மணிக்கு (இரண்டு மணியா மூன்று மணியா சரியாக ஞாபகம் இல்லை இருந்தாலும் இரண்டு மணியே வைத்துக்கொள்வோம்) பள்ளி விட்டுடுவோம் மறுபடியும் ஆயாம்மா கூப்பிட்டு வந்து விட்டுடுவாங்க சரிங்களா'னு சொன்னார்.

அம்மாவும், சங்கர் அம்மாவும் "ரொம்ப சந்தோசங்கம்மா நன்றிங்க அம்மா புள்ளைங்கள பாத்துக்கோங்கமா'னு சொல்லிவிட்டு, எங்களிடம் வந்து "ஒழுங்கா நல்லாப்படிக்கனும், பள்ளிக்கூடம் விட்டா ஆயாம்மாக்கூட ஓரம வரனும் சரியா" அப்படி சொல்லிட்டுத் திரும்பி வெளியே அம்மாக்கள் இருவரும் போகும் போது பயபுள்ள சங்கர் அழுதான் பாருங்க ஒரு அழுகை வகுப்பில் இருந்த கொஞ்ச நஞ்சம் அழுதுகிட்டு இருந்த பசங்களும் சேர்ந்து மொத்தமும் அழ ஆரம்பிச்சுட்டாங்க..

நான் மட்டும் அழவில்லைனு சொன்னா என்ன நம்பவா போறீங்க. நானும் தான்..

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக