திகில் காடு..
1
தூரத்தில் சுடுகாட்டில் எரிந்துக்கொண்டிருக்கும் பிணத்தின் வாடையும், வெளிச்சமும் அங்கு பரவியிருந்தது..
அந்த சுடுகாட்டிற்கு சற்று தள்ளித்தான் வாழவந்தானின் வயற்காடு..
வயலில் நெற்கதிர்கள் முற்றி அறுவடைக்காக காத்திருந்தன.
விடிந்தால் அறுவடை..
அதுவரை வயலுக்கு காவலாக குருவப்பன் இருக்கிறான்..
கருத்த, நடுத்தர உயரம், நல்ல வாட்ட சாட்டமான ஆளாக இருந்தான்..
கையில் லாந்தர் விளக்கை வைத்துக்கொண்டு, அதை தூக்கி காட்டி வயலினை அப்பப்ப பார்த்துக்கொண்டு இருந்தான்..
அப்படியே பார்த்துக்கொண்டிருந்த போது,
சுடுகாட்டில் எரியும் பிணம் கண்ணுக்குப்பட்டது..
"ம்ம்.. உயிரோட இருக்கும்போது என்ன ஆட்டம் போட்டான் வட்டிக்கட கோவிந்தன்..
அநியாய வட்டிக்கு விட்டு எத்தன பேரு வயித்தெரிச்சலை கொட்டியிருப்பான்..
இப்ப பக்கத்துல வெட்டியான் கூட இல்லாம அனாத பொணமாட்டோம் எரிஞ்சிகிட்டு இருக்கான்.. எத்தனைப் பேர வட்டிப்பணம் கட்டலைனு அசிங்கமா பேசி தற்கொலை பண்ணிக்க வச்சான்.. படு பாவி..
நேத்து யாரோ அவனோட வட்டிக்காச தரலைனு அவங்க வீட்டு வண்டி மாட்ட ஓட்டிகிட்டு வர வழியில வேகமா வந்த மண்ணு லாரியில அடிப்பட்டு வாய பொழந்துட்டான்.. முந்தநாளு இன்னையாரம் மப்புல இருந்தான்.. இன்னைக்கி பொணமா எரியிறான்.. இது தான் மனுசனோட வாழ்க்க"
என தனக்குத தானே பேசிகிட்டு ஒரு பீடிய எடுத்து பற்ற வைத்து அதன் புகையை நிதானமாக இழுத்து தன் நெஞ்சுக்கூட்டில் பரவ விட்டான்..
அப்பொழுது..
தூரத்தில் எங்கோ நாயோ, நரியோ ஊளையிட .. வானத்தில் அரை நிலாவின் அரைக்குறை வெளிச்சத்தில் அந்த இடமே ஒரு திகில் சூழலை தந்தது...
அந்த நேரத்தில் திடீரென ஒரு கொலுசொலி சத்தத்தை கேட்டு சுற்றுமுற்றும் பார்த்தான்..
கண்களுக்கு ஒன்றும் தென்படவில்லை..
லாந்தர் விளக்கை எடுத்து அதை பெரிதாக தூண்டிவிட்டு பார்த்தான்..
அப்பொழுது சற்று தூரத்தில் , ஊரின் எல்லையில் ஒரு பெண் வருவது போல இருந்தது..
'யாராயிருக்கும் .. இன்னியாரத்துல இந்த பொண்ணு இங்க ஏன் வருது.. ஊருக்கு வர கடைசி பஸ்ஸும் ஒம்போது மணியோட போச்சு.. இது எங்க இருந்து வருது..யாருன்னு தெரியலையே.. சரி வரட்டும் கேப்போம்..' என நினைத்து அந்த பெண் வரும் பாதையையே பாத்திருந்தான்.. சல்..சல்..சல்..சல்.. என மிதமான வேகத்தில் அசால்டாக நடந்து வந்தாள்..
குருவப்பனை நெருங்குகையில்
"யாருமா அது? இன்னேரத்துல .. யார் நீ? எந்த ஊரு ? இங்க எதுக்கு வந்த?" எனக் கேட்டுக் கொண்டே இருந்த குருவப்பன அந்த பெண் சட்டை செய்யாமல் விருவிரு என நடந்தவள் சுடுகாட்டை நோக்கி நடந்தாள்..
"ஏய்..யாரும்மான்னு கேக்குறேன் நீப்பாட்டுக்கு போய்கிட்டே இருக்க.. நில்லுமா" என கத்திக்கொண்டே அந்த பெண்ணின் பின்னால் சென்று கேட்டு, தன் கையிலிருந்த மூங்கில் தடியால் அந்த பெண்ணைத் தடுக்க,
"என்ன விடுடாஆஆ" என மூன்று பெண்குரல்கள் ஒன்றாக இணைந்து பேசுவது போல ஒரு பயங்கரமான குரல்..
அதிர்ந்தே விட்டான் குருவப்பன்..
இருந்தாலும் தைரியத்தை வரவழைத்து..
மறுபடியும் " நீ யாரு, எதுக்கு வந்திருக்க, ஒழுங்கு மரியாதையா சொல்லிடு.. இல்ல ...
இந்த வேல் கம்பாலையே உன்ன குத்திடுவேன் "என சொல்லி கம்பை ஓங்க..
அந்த பெண் திரும்பாமலேயே அந்தக்கம்பை பிடித்து " ஹாஹ்ஹாஹாஹாஹா" என பயங்கரமாக சிரித்து கம்பை வேகமாக இழுத்தாள்.. குருவப்பன் நிலைத்தடுமாறி அப்பெண்ணின் மேல் இடிக்கப்பபோக, திடீரென அவள் திரும்பி பார்க்க முகம் கர்ணகொடூரமாக இருந்தது..
குருவப்பனின் இதயமே நின்று விடும் அளவிற்கு அதிர்ச்சியில் பயந்துவிட்டான். பின்பு அவனை ஓங்கி ஒரு அடி கிட்டத்தட்ட முப்பது அடிகள் தூரத்திற்கு தள்ளிபோய் விழுந்தான்..
விழுந்தவன் சற்றுத் தலையை தூக்கிப் பார்த்த பொழுது.. அந்த பெண் சுடுகாட்டை நோக்கி செல்வது அவனுக்கு மங்கலாக தெரிந்தது..
'அய்யோ நம்ம ஊருக்கு ஏதோ ஆபத்து வந்திடுச்சு..ஊர் சனங்க என்ன பாடு படப்போறங்களோ' என்று அவன் தலை மண்ணில் சாய்ந்தது..
சுடுகாட்டை நோக்கி வேகமாக நடந்த அந்த பெண் சில நொடி பொழுதினில் சுடுகாட்டு எரிமேடையை அடைந்தாள்..
அடுத்து அவள் செய்த செயல்தான் நெஞ்சையே பதற செய்தது..
எரிந்துக் கொண்டிருந்த வட்டிக்கட கோவிந்தனின் பிணத்தை இழுத்து நெருப்போடு பிய்த்து தின்ன ஆரம்பித்தாள்.
திடீரென
அப்பொழுது....
(தொடரும்)
விஜயகுமார் வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக