வியாழன், 18 அக்டோபர், 2018

காத்திருந்த கண்கள் 8

காத்திருந்த கண்கள்.8

  குருநாத பெரியவர், செங்கோடன் உட்பட்ட அனைவருக்கும்  ஒரு யோசனை சொல்லிக்கொண்டு இருக்கும் அதே நேரத்தில்..

இரண்டு குதிரை வீரர்கள் சங்கிலிபுரத்தில் உள்ள ஊர்த்தலைவர் நந்தியப்பர் வீட்டுக்கு அருகில் வந்து, குதிரையிலிருந்து இறங்கி, வாசலில் நின்று குரல் கொடுக்க, உள்ளிருந்து நந்தியப்பர் வந்தார்..
"அடடே.. வாங்க..வாங்க.. அரண்மனை வீரர்களே.. என்ன இது இந்தப்பக்கம்.. ஏதும் முக்கிய செய்தியா?" என்று கேட்டப்படியே இருவரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்று இருக்கைகளில் உட்கார வைத்தார்..
"அய்யா.. ஒரு முக்கிய தகவல்.. சிறைக்காவலின் உயரதிகாரி தங்களிடம் தெரிவிக்க சொன்னார்..  தாங்கள் பிடித்துக்கொடுத்த கைதிகளில் நஞ்சப்பன் என்ற ஒருவன் தப்பி விட்டான்.. அவனைத் தேடும் பணிகள் வேகமாக முடக்கி விடப்பட்டுள்ளது.. அவன் இங்கே வந்தாலும் வரலாம்.. அதானால் தாங்கள் கவனமுடன் இருக்கும்படியும், அப்படி தங்கள் ஊருக்கு வந்தால் தகவல் தரும்படியும் சொல்லிவிட்டு வரச் சொன்னார்கள் அய்யா" என்று அரண்மனை வீரர் சொல்ல..
நந்தியப்பர் கொஞ்சம் ஆழ்ந்த சிந்தனையில் இருக்க..
"சரிங்க ஐயா.. நாங்கள் கிளம்புறோம்" என்று இரண்டு பேர்களும் வணக்கம் சொல்லிவிட்டு கிளம்ப.. நந்தியப்பர் அவர்களை வாசல் வரை வந்து வழியனுப்பி விட்டு நின்றார்..

அப்பொழுது அவரின் மகன் குமரன் வந்தான்.. 'குமரா.. பெரிய சங்கிலி ஐயாவை உடனே நான் கூப்பிட்டதாகச் சொல்லி அழைச்சிட்டு வா" என்று சொன்னதும், குமரன் கிளம்பி நேராக கோவிலில் உள்ள பயிற்சித் திடலுக்குச் சென்றான்..
அங்கே பெரிய சங்கிலி ஊர் இளவட்ட பிள்ளைகளுக்கு சிலம்பம் சுழற்றியபடி சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்தார்..
இத்தனை பெரிய வயதிலும் , ஒரு இளைஞனைப் போல சுறுசுறுப்பாக சுழன்று சுழன்று ஆடிக்கொண்டிருந்தார்..
நேராக அவரிடம் சென்று குமரன் விவரம் சொல்ல..
உடனே தனது சிலம்பத் தடியை அருகிலிருந்தவனிடம் கொடுத்துவிட்டு தொடரும்படி சொல்லிவிட்டு கிளம்பினார்.. அந்தேரம் பார்த்து சங்கிலி கறுப்பர் எதிரில் வர, அவரையும் அழைத்துக் கொண்டு குமரனோடு வீட்டுக்குச் சென்றார்..

அங்கு.. வாசல் திண்ணையில் அமர்ந்திருந்த நந்தியப்பர் , பெரிய சங்கிலியிடம் , அரண்மனை வீரர்கள் சொன்ன தகவலைச் சொல்ல..
"நந்தியப்பரே.. நஞ்சப்பன் தப்பியிருந்தாலும் நம்மூருக்கு உடனே வர வாய்ப்பில்லை.. அப்படி வந்தாலும் நம் பார்வையிலிருந்து தப்பிக்க முடியாது.. அவன் நிச்சயம் கொள்ளை கும்பல் இருக்கும் இடத்திற்குத் தான் போயிருப்பான்.. " என்று பெரிய சங்கிலி சொல்ல..

"அதைத்தான் நானும் நினைத்தேன் பெரிய சங்கிலியாரே..  நீங்களும், நம்ம சங்கிலி கறுப்பரும் உள்ளவரை நம்மூருக்கு எந்த பாதிப்பும் வர பயப்படுமே.. சரி உங்கள் பயிற்சி பட்டறை எப்படி போகிறது?" நந்தியப்பர் கேட்க..

"இப்பொழுது நம்மூர் பிள்ளைகள் காவல் பயிற்சியில் திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.. குமரனும் சிறப்பாக செயல்படுகிறான்.. அந்த காவல் குழுவின் தலைமை பொறுப்பை குமரனுக்கு கொடுக்க இருக்கிறேன்.. இன்றிலிருந்து சங்கிலி கறுப்பனுடன், குமரனும் இரவு காவலுக்குச் செல்வான்.. பல நுணுக்கங்களை சங்கிலி அவனுக்கு கற்றுத் தருவான்..
இன்னொரு முக்கியமான விசயம்.. நம் இளைஞர்களில் சிலரை பகலில் நம்ம ஊரை கண்காணிக்கவும், சிலரை இரவில் கண்காணிக்கவும் என இரண்டு குழுக்களாக பிரித்துவிட்டேன் நந்தியப்பரே.. அதே நேரத்தில் எங்களுக்குத் தெரிந்த சில சித்து விளையாட்டுகளை குமரனுக்குச் சொல்லிக் கொடுக்கப் போகிறேன்.." என்று ஒரு சிரிப்போடு சொல்ல..
அந்த சிரிப்பின் அர்த்தத்தை புரிந்தது போல சங்கிலி கறுப்பரும் ரகசிய சிரிப்பு சிரிக்க..
குமரன் இருவரையும் கைகுவித்து கும்பிட்டு, பெரிய சங்கிலியின் கால்களில் விழ.. காம்பீரமாக அவனை எழுப்பி, தன் இடையில் இருந்த பையிலிருந்து திருநீற்றை எடுத்து குமரனுக்குப் பூச..
சங்கிலி கறுப்பர் குமரன் தோளில் தட்டிக் கொடுத்தார்..
நந்தியப்பரும் மகிழ்ச்சியில் குமரனை வாழ்த்தினார்..

"ஆனால்.. நந்தியப்பரே.. இனி நாம் மிக கவனமாக இருக்க வேண்டும்..என என் உள்ளுணர்வு அடிக்கடி சொல்கிறது..
இனி முழுப் பொறுப்பும் சங்கிலியிடமும், குமரனிடமே..
நம்மூரிலிருந்தே ஒரு துரோகி எதிரியாகிவிட்டான்..
நம் ஊரின் அனைத்து விபரங்களையும் தெரிந்தவன் நஞ்சப்பன்.. நாளையிலிருந்து சில மாற்றங்களை செய்ய வேண்டும்...
அதற்கு நம்ம தர்மகர்த்தா நீலகண்டரிடமும் கலந்து ஆலோசிக்க வேண்டும்..
அதனால் நீங்களும் , நீலகண்டரும் மாலை சூரியன் மறைவிற்குப் பின்பு வெள்ளி முளைக்கும் நேரத்தில் கோவிலுக்கு வாருங்கள்" என்று பெரிய சங்கிலி பேசி முடிக்க..

"சரிங்க.. பெரிய சங்கிலியாரே.. வந்துவிடுகிறேன்" என்று நந்தியப்பர் சொல்ல ..
பெரிய சங்கிலியும், சங்கிலி கறுப்பரும் கிளம்பினார்கள்..

சூரிய மறைவுக்குப் பிறகு..
இருட்ட ஆரம்பிக்க.. வானில் வின்மீன்கள் எட்டிப் பார்க்க ஆரம்பித்தன..
நந்தியப்பர் தன் வீட்டிலிருந்து கிளம்பி தர்மகர்த்தா திருநீலகண்டர் வீட்டை நோக்கி நடக்க..
அவரை ஒரு கருப்பு அங்கி உருவம் பின்தொடர ஆரம்பித்தது..

(தொடரும்)

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக