செவ்வாய், 23 அக்டோபர், 2018

காத்திருந்த கண்கள் 9

காத்திருந்த கண்கள் 9

பொழுது இருண்டதும் நந்தியப்பர் தன் வீட்டை விட்டு கிளம்பி, தர்மகர்த்தா நீலகண்டன் வீட்டை நோக்கி நடக்க அவரை ஒரு கருப்பு போர்வை போட்ட உருவம் பின்தொடர்ந்தது..
நீலகண்டர் வீட்டுக்குப் போய் அவரை சந்தித்து விவரத்தை சொல்ல இருவரும் கோவில் நோக்கி நடந்தனர்..
கோவில் ஆளரவம் இன்றி அமைதியாக இருந்தது..
கோவிலின் முன்புறம் விளக்குத் தூண் எரிந்துக்கொண்டு இருந்தது..
அதன் ஒளியின் அசைவில் கோவில் வாசலில் உள்ள காவல் சிலைகளின் முகம் அசைவதைப் போலவே இருந்தது..
பக்கத்தில் இருந்த அகல் விளக்கின் சுடர் அதன் கண்களின் வளவளப்பில் எதிரொளிக்க.. அந்த சிலையின் கண்கள் ஒளிவீசுவது போல தத்ரூபமாக இருந்தது..
இதை பார்த்த தர்மகர்த்தா நீலகண்டர் அந்த சிலையை தடவிப் பார்த்தார்..
அதை பார்த்த நந்தியப்பர் ஒரு சின்ன சிரிப்புடன்
"என்ன நீலகண்டரே.. கோவிலில் நடந்த அசம்பாவிதத்திற்கு பிறகு எல்லாருக்கும் எச்சரிக்கை உணர்வு வந்துடுச்சுப் போலையே.. " என்று சொல்ல..
"இருக்காதா தலைவரே.. அந்த சிலைய பாருங்க அச்சு அசலா ஒரு ஆள் நிக்கிறாப் போலவே இருக்கு.. இத்தனை நாளாக இதை பார்த்திருப்போமா.. எவ்வளவு சிறப்பாக இருக்கு நம்ம முன்னோர் கைவண்ணம்" என்று தர்மகர்த்தா சொல்ல..
அதை ஆமோதிப்பதை போலவே தலையாட்டினார் நந்தியப்பர்..

"அடடே.. வந்து ரொம்ப நேரம் ஆச்சுங்களா நந்தியப்பரே..
வணக்கம் உங்களுக்கும், நீலகண்டருக்கும்" என்ற பெரிய சங்கிலியின் குரலை கேட்டு இருவரும் திரும்ப..அங்கே சங்கிலி கறுப்பரும் உடன் நின்றிருந்தார்..
"இப்ப தான் வந்தோம்.. சங்கிலியாரே" என்று நீலகண்டர் சொல்ல..
நான்கு பேரும் கோவிலுக்குள் போனார்கள்..
உள்ளே பூசாரி , சாமி நடையை சாத்திக்கொண்டிருக்க..
"ஆகா.. நல்லதா போச்சு நம்ம பூசாரி முத்தண்ணனும் இருக்காங்களே" என்று நந்தியப்பர் சொல்ல..
எல்லாருக்கும் வணக்கம் வைத்தப்படி "ஆகா.. வாங்க..வாங்க.. ஊர் பெரியவங்களாம் வந்திருக்கீங்க.. ஏதும் முக்கியமான விசயமா?" என்று பூசாரி கேட்க..
ஆமாம் என்பதைபோல தர்மகர்த்தா தலையசைத்தார்..
ஐந்து பேரும் , கோவிலின் மண்டபத்திற்கு சென்று உயரமான தரையில் அமர்ந்தார்கள்.. சங்கிலி கறுப்பர் மட்டும் அமராமல் கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தார்..

பெரியவர்கள் நான்கு பேரும் கோவிலில் நடந்த சம்பவத்தை பேச ஆரம்பித்து , அதை தொடர்ந்து என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என விவாதிக்க ஆரம்பிக்க..
பெரிய சங்கிலி தனது ஆலோசனைகளை சொல்லிக்கொண்டு இருந்த நேரத்தில், சட்டென்று சங்கிலி கறுப்பரை பார்த்து கண்களால் சைகை காட்ட..
சங்கிலி கறுப்பரும் மெல்ல நகர்ந்து நடக்க ஆரம்பித்து.. மண்டப தூண்களில் சற்று பெரிதான தூணுக்கு பின்னால் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் சட்டென பாய்ந்து ஒரு உருவத்தை ஓங்கி அடித்தார்.. அந்த உருவம் மயக்கம் அடைந்து கீழே விழுந்தது..
கருப்பு போர்வைசுற்றியிருந்த அந்த உருவத்தை தூக்கி வந்து பெரியவர்கள் முன் கிடத்தி போர்வையை எடுக்க..
"ஏ.. இவன் காசி.. நஞ்சப்பனோட நண்பனாச்சே" என தர்மகர்த்தா சொல்ல..

"ஆமா.. அவனே தான்.. கொஞ்ச நாளா நம்ம ஊருக்குள்ளையே இல்ல.. இவனும், நஞ்சப்பனும் அடிக்கடி வெளியூர் போயிட்டு வருவாங்க.. போன தடவ போகும்போது போனவன் அதுக்கப்பறம் வரவேயில்ல.. நஞ்சப்பனும், இவனும் ஏதோ உளவு வேலை பாக்குறாங்கனு அப்பவே எனக்குத் தோனிச்சு.. நேத்து தான் நம்ம ஊருக்குள்ள மறுபடியும் வந்திருக்கான்..
அனேகமா தப்பிச்சிப் போன நஞ்சப்பன் இருக்குற இடம் இவனுக்குத் தெரியும்.. அவன் தான் இவன் உளவு பாக்க அனுப்பியிருப்பான்.. நேத்து சாய்ங்காலத்திலிருந்து தலைவர் வீட்டையும், தர்மகர்த்தா வீட்டையும் தீவிரமா கவனித்து வந்திருக்கான்.. தலைவர் அவர் வீட்ல இருந்து கிளம்பும்போதே பின்தொடர்ந்து வந்ததா நம்ம குமரன் நாங்கள் கோவிலுக்கு வரதுக்கு கொஞ்சம் முன்னாடி சொல்லிட்டு போனான்" என்று சங்கிலி கறுப்பர் சொல்லவும் ..
மற்றவர்கள் சங்கிலி கறுப்பையும், காசியையும் மாறி மாறி பார்த்தார்கள்..

"ஆமாம்.. இப்போ இவனை என்ன செய்யலாம்" என நந்தியப்பரும், பூசாரியும் ஒரே நேரத்தில் கேட்க..

"இவனை வைத்து தான் நம்ம குமரனுக்கு ஒரு வேலை கொடுக்கப் போறேன்" என்று ஒரு மர்ம புன்னகை சிரித்தார் சங்கில கறுப்பர்.. அதனைப் பார்த்து பெரிய சங்கிலியும் சிரிக்க..
தலைவர், தர்மகர்ர்தா, பூசாரி இவர்களின் முகத்தில் குழப்பத்தோடு அமைதியாக..
"எது செய்தாலும் சங்கிலிகறுப்பு நம்ம ஊரோட நல்லதுக்குத் தான் செய்யும்" என்று பூசாரி அமைதையை உடைக்க..
மற்ற மூவரும் "ஆமாம்" என்றார்கள்..

"சரி.. நீங்கள் ஆலோசனையை தொடருங்க.. நான் கொஞ்ச நேரத்தில் வந்துடுறேன்" என்று சங்கிலி கறுப்பர் சொல்லியபடி மயக்கமடைந்த காசியை தன் தோளில் தூக்கிக்கொண்டு கோவிலிருந்து சற்றுத் தள்ளி.. வயல்வெளிக்கு வந்து அங்கு ஒரு சிறிய வீட்டை நோக்கி நடந்துப் போனார்..
அங்கு இரு இளைஞர்கள் கையில்
வேல் சொருகியிருந்த சிலம்பத்தோடு காவலுக்கு இருந்தார்கள்..
"கந்தப்பா.. நீ மேற்கு பகுதி காட்டுல காவலுக்கு நில்லு. அங்க நிக்கிற குமரன உடனே இங்க வரச்சொல்லு.. சீக்கிரமா வரனும்.. இந்த குதிரையை எடுத்துட்டுப் போய் குமரனிடம் கொடுத்து அனுப்பு.. இனிமேல் நமக்கு நிறைய வேல இருக்கு.. ம்..சீக்கிரம்" என்று அனுப்பி விட்டு  மயக்கமான காசியை அந்த வீட்டிற்குள் படுக்க வைத்துவிட்டு வந்து ஒரு திண்டின் மீது அமர்ந்தார்..
  சிறிது நேரத்தில் குமரன் குதிரையில் வந்து இறங்கினான்..
"கறுப்பண்ணே.. சொல்லுங்க ஏதும் முக்கியமான வேலையா? அவசரமா வரச்சொன்னீங்களே" என்று கேட்க..

"ஆமாம்.. குமரா.. இனிமேல் தான் நமக்கு வேலையே ஆரம்பம்.. அந்த காசிய மயக்கமடைய வச்சி வீட்டுக்குள்ள படுக்க வச்சிறுக்கேன் நீ என்ன செய்யிற" என சொல்லியபடியே குமரனின் காதில் மெதுவாக ஏதோ சொல்ல..
குமரனின் கண்கள் பிரகாசமாகி "சரிங்கண்ணே" என்று சொல்ல..

"குமரா.. இந்த முத்து வீரனையும் உன்னுடனேயே வைத்துக்கொள்.. கவனம்.. நான் கிளம்புறேன்" என்று இன்னொரு இளைஞனை காட்னி சொல்லிவிட்டு சங்கிலி கறுப்பர் கோவிலை நோக்கி நடந்தார்..

குமரனும், முத்து வீரனும் வீட்டிற்குள் நுழைந்து காசியை ஒரு கயிற்றால் லேசாக கட்டிப்போட்டுவிட்டு வெளியே வந்து உட்கார்ந்திருந்தனர்..
சிறிது நேரங்கழித்து ஒரு சப்தம் கேட்க..

அப்பொழுது..

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக