நினைவுகள் - பாகம் - 6
உலகின் அனைத்து நிழல்களின் நிறங்களும் கருப்பாக
வறுமையின் நிறம் மட்டும் ஏனோ சிவப்பாக..
இரண்டாம் வகுப்பிற்கு சென்றாகிவிட்டது. பசங்களிடையே ஒருப்பேச்சு பரபரப்பாக இருந்தது. என்னவென்றால்- 'டேய்! இரண்டாம் வகுப்புல நமக்கு அந்த குண்டு டீச்சர் மட்டும் வரக்கூடாதுடா (மேரி டீச்சர் சற்று கூடுதல் உடல் பருமனானவர்கள். உருவத்தைப் பார்த்து அனைவருக்கும் பயம்) பயங்கரமா அடிப்பாங்களாண்டா.. நாலாம் வகுப்புல ஒரு அண்ணா சொன்னாருடா'னு சும்மா இருந்த எங்கள பயமுறுத்தி விட்டுட்டான் சங்கர்.
"அப்பனா எந்த டீச்சர்டா அடிக்க மாட்டாங்கடா கேட்டியாடா"இது நான்.
(அடிக்காத டீச்சர் நல்ல டீச்சர்னு நாங்க இரண்டு டீச்சருக்கு பட்டம் கொடுத்திருந்தோம் ஒருவர் பத்மா டீச்சர் ஒல்லியா உயரமா இருப்பாங்க. இன்னொருவர் கஸ்தூரி டீச்சர் கருப்பா கண்ணாடி போட்டிருப்பாங்க).
'ஒன்னு பத்மா டீச்சர் இல்லனா கஸ்தூரி டீச்சராம்டா நாம சாமிய கும்புட்டுப்போம் இந்த ரெண்டுப் பேர்ல ஒருத்தங்கதான் வரனும்னு' எல்லாரும் வேண்டிக்கிட்டோம். கடவுள் கண்ணத் திறந்துட்டார். எங்களுக்கு பத்மா டீச்சர் தான் வந்தாங்க.
ஆரம்பத்துல நல்லா தான் போயிட்டு இருந்திச்சு. ஆனால் போகப்போக வீட்டுப்பாடம் எழுதலைனாலோ, இல்லை சேட்டைத் தனம் செய்தாலோ அடி பின்னி எடுத்திடுவாங்க. அவங்க மகனும் பெயர் மணிகண்டன் எங்களுடன் தான் படித்தான். அவனும் அடி வாங்குவான்.
அய்யயோ நாம நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு ஆகிடிச்சேனு நொந்துகிட்டோம்.
ஒழுங்கா இருந்தா ஏன் அடிவாங்கப் போறோம். முகமது ரசூலைத் தவிற மற்ற நாங்க நாலுபேருமே அருந்தவாலுங்க.
அடிக் கிடைக்காம வேற என்ன கிடைக்கும்.
அப்படியேப் போயிட்டு இருந்துச்சு காலம்.
அரையாண்டுத் தேர்வுனு நினைக்கிறேன் முடிஞ்சி, விடுமுறையும் முடிஞ்சி பள்ளிக்கூடம் வரும்பொழுது பத்மா டீச்சர் வரவில்லை. கொஞ்ச நாளைக்கு வரமாட்டாங்கனு மற்ற டீச்சரெல்லாம் பேசிகிட்டு இருந்தாங்க. நாங்களெல்லாம் சந்தோசப்பட்டுகிட்டு இருந்தோம்.
இனிமே அடிவிழுகாது இல்லையா.
ஆனால் சந்தோசம் கொஞ்சம் நேரந்தான் நீடிச்சது.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக